Lankamuslim.org

கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1,2

leave a comment »

lankamuslimவை.எல்.எஸ்.ஹமீட்: மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை நமது முட்டில் தங்கியிருக்கவும் செய்தான்.

நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு புறம் நாம் கொண்டுவந்த ஆட்சி. மறுபுறம் நமது முட்டில் தங்கியிருக்கும் ஆட்சி. முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இப்படியொரு ஆட்சிக்கான சந்தர்ப்பம் இன்னுமொரு முறை வருமா? என்று தெரியாது.

நமது பிரதிநிதித்துவங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். நாம் இந்த நாட்டில் இன்று ஓர் மகிழ்ச்சியான சமூகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

இனவாதத்தை கக்கிய ஞானசாரரும் கூட்டமும் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் இனவாதத்தைக்கக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாம் என்ன செய்தோம். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துவிட்டு முகநூல்களில் விளம்பரம் தேடினோம். பங்காளியாக இருந்துகொண்டும் அரசை நடவடிக்கை எடுக்கவைக்க முடியாமல் பொலிசில் முறைப்பாடு பதிவதற்கு அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற சமூகம் நாம்தான்.

அரசை நடவடிக்கை எடுக்க வைக்கச்செய்யமுடியாமல் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யும் அமைச்சர்களை யார்தான் கணக்கெடுப்பார்? சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் முஸ்லிம் இனவெறுப்பு தொடர்ந்து வளர்க்கப்பட்டது.

எமது கையாலாகத்தனத்தைக் கண்டுகொண்ட அரசு ஞானசாரருக்கெதிராக வழக்குத்தொடுக்கப்பட்ட சட்டத்தையே மாற்றி பிணைவழங்கியது. என்ன செய்துவிட்டோம். இத்தனைக்கும் ‘ நாம் கொண்டுவந்த ஆட்சி, நம்மில் தங்கியிருக்கும் ஆட்சி.

இழப்பிற்கு மேல் இழப்பு
——————————-
கடந்தகாலங்களில் இழந்த எதையும் பெறவில்லை. 10 வீதம் இருந்தும் ஓர் அரசாங்க அதிபரைப்பெற முடியவில்லை. மாறாக, கல்முனைப் பிரதேசத்தில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்போன்ற பிராந்தியக் காரியாலயங்களை இழந்தோம். முசலியில் மஹிந்தவிடம் 12000 ஏக்கர் காணிகளைத்தான் இழந்தோம். மைத்திரியிடம் ஒரு இலட்சம் ஏக்கரையே இழந்தோம். பெற்றவை எதுவுமில்லை. பதவிகளை பலதடவை ஊடகங்களில் தூக்கியெறிந்தோம். ஆனால் அதே பதவிகளைக் காப்பாற்றுவதற்காக பின்கதவால் போய்க் கெஞ்சினோம். முன்கதவால்போய் கொடுத்த முட்டின் தைரியத்தில் சண்டை பிடித்தோம்.

கிந்தோட்டையிலும் இழப்பு
————————————
முஸ்லிம் சமூகம் கிள்ளுக்கீரையாகப் பார்க்கப்பட்டது. தைரியமாக, கிந்தோட்டை எரிக்கப்பட்டது. அதிரடிப்படை துணைபோனது, வெளிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது; என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நமது பிரதிநிதித்துவங்களின் கையாலாகத்தனம் மீண்டும் நீரூபிக்கப்பட்டது. இருப்பினும் நமது தலைமைகளின் வீரவசனங்கள் கடந்த தேர்தலிலும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

பாதிப்பான தேர்தல் சட்டத்திற்கு கைஉயர்த்தியமை
—————————————————————-
‘ அச்சமும் மடைமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாய் வாழாமல், அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!’, என்று அரசியல் செய்வதற்காகவே இந்தக் தனித்துவ கட்சி, என்று மேடைமேடையாக பேசித்தான் இந்தக் கட்சியை மறைந்த தலைவர் வளர்த்தார்.

இப்பொழுது தனித்துவக்கட்சியென்றால், அடிமைகளின் கட்சிகள், என்றநிலை வந்துவிட்டது. அதனால்தான் முஸ்லிம்களுக்கு பாதகம்தான், ஆனால் ராஜித அடிக்க வந்தார், அவர் இடிக்க வந்தார்; எனவே கையுயர்த்தினோம்; என்கின்ற கேவலமான நிலைக்கு வந்தோம். பட்டியல் 50% நமக்கில்லை. தொகுதியாவது 50% வீதம் கிடைக்காதா என ஏங்குகிறோம். ஆனால் அதுவும் கிடைக்கப் போவதில்லை. மாகாணங்களில் நிரந்தர அடிமை முத்திரை, நமது தனித்துவக் கட்சிகளின் உதவியால் நம்மீது குத்துவதற்கு ஆவணங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அம்பாறை- கண்டி கலவரங்கள்
—————————————-
கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சுமார் 40% தாண்டியது. அடுத்த இலக்கு சிறுபான்மை வாக்கு. தமிழ் சமூகம் ஒருபோதும் மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிக்காது. முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சமூகம் என்பது அவர்களுக்குத் தெரியும். இனவாத நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு அரசுக்கெதிராக தம்பக்கம் முஸ்லிம்கள் திரும்பலாம்; என்று அவர்கள் கணக்குப்போட்டிருக்கலாம். எனவே, கூட்டு எதிர்க்கட்சிதான் கலவரத்தைத் தூண்டியது; என்பது உண்மையென உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையாக இருக்கமாட்டாது; என நிராகரிக்கவும் முடியாது.

மறுபுறம், ஐ தே கட்சி கடந்த தேர்தலில் 30% வீதத்திற்குள் சிரமப்பட்டது. இலங்கையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 10%. இவர்களுள் 8% ஆவது ஐ தே கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் வாக்குகள் அடித்தாலும் உதைத்தாலும் ஐ தே கட்சிக்கென்று எழுதிவைத்த வாக்குகள். வடகிழக்கு வாக்குகளைத் தரகர் கட்சிகள் கடந்த தேர்தலிலும் பெற்றுக்கொடுத்தார்கள். எதிர்காலத்திலும் பெற்றுக்கொடுப்பார்கள். எனவே, ஐ தே கட்சி அதிகரிக்கவேண்டியது பெரும்பான்மையின வாக்கு.

இனவாதிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பெரும்பான்மையைப் பகைக்கக் கூடாது; என்பதனால் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த பிரதமர் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம்.

சுருங்கக்கூறின் கலவரத்தைத் தூண்டியது யார்? என்பது வாதப்பிரதிவாதத்திற்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரதமர் தன்மெத்தனப்போக்கால் இனவாதிகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்; என்பது மாத்திரம் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே, இக்கலவரத்தில் பிரதமருக்கு பங்கு இருக்கின்றது; என்பது நிறுவப்பட்ட ஒன்று.

கலவரத்தைத் தூண்டினால் மாத்திரம் பங்கு இருக்கின்றது; என்பதல்ல. சட்ட ஒழுங்கு அதிகாரத்தை தன்கையில் வைத்துக்கொண்டு கலவரத்தை அனுமதிப்பதும் பங்களிப்புத்தான்.

என்னைப்பொறுத்தவரை அடிப்படையில் பிரதமர் ஒரு இனவாதியல்ல; என்றே இன்னும் நினைக்கின்றேன். அதற்காக பிரதமர் தரப்பு கலவரத்தை தூண்டவில்லை; என்று நிராகரித்துவிடவும் முடியாது. இந்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக யாரும் எதையும் செய்வார்கள். கலவரத்தூண்டலில் பிரதமர் தரப்பிற்கு பங்கிருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அனுமதித்தார் என்பது மாத்திரம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.

பிரதமரின்கீழ் செயற்பட்ட பொலிசாரும் அதிரடிப்படையினரும் வெளிப்படையாகவே பங்களிப்புச் செய்தார்கள்; என்பது நாடறிந்த உண்மையாகும். ஆனால் அவர்களுக்கெதிராக இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை. கலவரம் தொடங்கிய மறுநாள் பாராளுமன்றத்தில் பொலிசார் சரியாகத்தான் நடந்தார்கள்; என்று பொலிசாரைப் பாதுகாத்துப் பேசுகின்றார்.

இதன்பொருள் என்ன? பொலிஸ்மாஅதிபரிடம் அறிக்கை கோரியதால்தான் பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்; என்று கபே குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இந்நிலையில் நம்மவர்கள் பாராளுமன்றில் சுத்தத்தமிழில் வீரப்பேச்சுக்களைப் பேசி ஊடகங்களில் எல்லாவிளம்பரங்களையும் செய்துவிட்டு ஒய்வெடுக்கிறார்கள்.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதாகக் கூறினார். ஆனால் இன்னும் ஆணை வழங்கவில்லை குழுவை நியமிப்பதற்கு. ஏன் தாமதம்?

விக்டர் ஐவன் கூறியிருக்கின்றார், அம்பாறை- கண்டி கலவரங்கள் பெரகராவுக்கு முன்வரும் விளையாட்டுக்காரர்கள் மட்டும்தான். பெரகரா இன்னும் வரவில்லை. ஆனால் வரும் என்று. இனவாதமில்லாத ஒரு மனிதர் அவர். முஸ்லிம்களை எச்சரித்திருக்கின்றார், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும் என்று.

இந்நிலையில்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கின்றது.

முஸ்லிம் பார்வை: பாகம்-2
=================================

வை எல் எஸ் ஹமீட்

தோற்றுப்போன முஸ்லிம் அரசியல்
———————————————-
நல்லாட்சி அரசுக்காக முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டது, கொழுந்துவிட்டெரியும் இனவாதத்தை அணைத்து அதன் சாம்பலைக்கூட துடைத்தெறிவதற்காக. நல்லாட்சி அரியணை ஏறியதும் இனவாதிகள் அச்சத்தின் உச்சத்தில் சிறிது காலம் அடங்கித்தான் இருந்தனர் எந்தச் சிறையில் கம்பியெண்ண வேண்டிவரும் என்று தெரியாமல்.

நல்லாட்சியோ பொம்மையாட்சி என்பது அவர்களுக்குப் புரிந்தது. நம்மவர்களோ, சிலர் ரணில் புராணம்பாட, சிலர் மரணிக்கும்போதும் அதே அமைச்சைக் கட்டியணைத்துக்கொண்டு மரணிக்க வேண்டும்; என்ற ஆசையில் அவ்வமைச்சை அனுபவிப்பதில் குறியாக இருந்தார்கள்.

இனவாதிகள் மெதுமெதுவாக தலைநீட்ட ஆரம்பித்தார்கள். அரசு அவர்களைக் கண்டுகொள்வதற்குமுன் நம்மவர்களே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இனவாதம் தம்வீரியத்தை மீண்டும் காட்டத்தொடங்கியது. அப்பொழுதுதாவது நம்மவர்கள் அரசுக்கு எச்சரிக்கைமணி அடித்திருந்தால் அரசு அப்போதே விழித்திருக்கும்.

அதன்பின் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காதபோதாவது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் அரசு காலைப்பிடித்திருக்கும். வெட்கமில்லாமல் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கே நடவடிக்கை எடுக்காத அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். அரசுக்குத் தெரியும் இவர்களின் தேவை என்னவென்று. எனவே, இனவாதத் தீயில் வெதும்பிய முஸ்லிம்களின் வேதனை விசும்பல்களை அரசு கண்டுகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை.

இவர்களின் சோரம்போன தனத்தால் ஏற்பட்ட தைரியம் ஞானசாரவை அரசு விடுவித்தது. அப்பொழுதாவது நம்மவர்கள் உசாரடைந்தார்களா?

அரசின் இனவாதிகளுடனான தாராளப்போக்கு கிந்தோந்தோட்டையை தீயில் கருக்கியது. அப்போதாவது ஆகக்குறைந்தது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு அரசைவிட்டு வெளியேறாவிட்டாலும் பின்வரிசையிலாவது அமர்ந்தார்களா? அமைச்சுக்கள் கைமாறிவிட்டால் நிலைமை என்ன? என்றுதான் கவலைப்பட்டார்கள்.

அம்பாறை- கண்டி இனக்கலவரத்திற்கு யார் பொறுப்பு
———————————————————-
இந்த இனக்கலவரத்தை யாரோ திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம். சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாயிருந்த பிரதமர் அரசியல் ஆதாயத்திற்காக அதனை அனுமதித்திருக்கலாம். இனக்கலவரத்தைத் தூண்டியோர்தான் பொறுப்பு எனலாம். இல்லை அதை அனுமதித்த பிரதமர்தான் பொறுப்பு எனலாம். இல்லை இருதரப்புமே பொறுப்பு எனலாம். இந்தக்கூற்றுக்கள் எல்லாமே சரி. ஆனால் இவை எல்லாவற்றையும்விட மிகச்சரியான ஓர் உண்மை இருக்கின்றது. அது இதுவரை யாராலும் சுட்டிக்காட்டப்படாதது. எங்கே பிழை இருக்கின்றது; என்பதை சரியாக அடையாளம் காணாமல் அதற்குத் தீர்வுகாண முடியாது.

இன்று இந்நாட்டில் சகலரும் ஏற்றுக்கொள்ளுகின்ற, பேசுகின்ற ஒருவிடயம்தான் அரசு இதனைக் கட்டுப்படுத்தவில்லை; என்பது. ஏன் கட்டுப்படுத்தவில்லை? கடந்த ஆக்கத்தில் அதுதொடர்பாகப் பார்த்தோம். அது பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக பிரதமர் மெத்தனமாக நடந்துகொண்டது; என்பதாகும். இதைவிட பிரதமர் இவ்விடயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதற்கு வேறுகாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உள்ளூராட்சித்தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிக்க முனைவது அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கும் அதற்கடுத்த பொதுத்தேர்தலுக்குமாகும். எல்லா வாக்குஅதிகரிப்பு முயற்சியும் ஆட்சியைப்பிடிப்பதற்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாகும்.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியை ஏற்கனவே பிடித்துவிட்டார். ஆட்சிக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. அவரிடம் சொந்த பெரும்பான்மை இல்லை. எனவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொரு நாளும்
தங்கியிருக்கின்றார். இன்று இருக்கின்ற ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் அவர் ஆட்சியைப் பிடிக்க பல ஆண்டுகள் செல்லலாம்; என்பது அவருக்கு தெரியாததல்ல. 2004ம் ஆண்டு அனுபவம் அவருக்கு இருக்கின்றது.

இந்நிலையில் நாளையத் தேர்தலுக்காக, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக, (அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக என்று வைத்துக்கொள்வோமே, ) இன்று முஸ்லிம்களில் தங்கியிருக்கின்ற ஆட்சியை இழக்க விரும்புவாரா? குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க அவர் துணிவாரா? இங்குதான் நாங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். ஆனால் துணிந்து கட்டுப்படுத்தாமல் இருந்தார். தன் ஆட்சியைப்பற்றி அவர் பயப்படவில்லை.

ஏன் பயப்படவில்லை. அவருடைய ஆட்சி கவிழாது; என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்குகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏன் அவருடைய ஆட்சி கவிழாது. ஏன் அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்க்கமாட்டார். ஏனெனில் நம்மவர்கள் கண்டிப்பாக ஆட்சியைவிட்டு விலகமாட்டார்கள்; என்று அவருக்குத் தெரியும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கமாட்டார்கள்; எனவும் அவருக்குத் தெரியும். அதுதானே இதுவரை நடந்தது. இப்பொழுதும் நடந்துகொண்டிருக்கின்றது.

எனவேதான் இனவன்செயலில் பாராமுகமாய் இருந்து முஸ்லிம்களுக்கு அழிவு ஏற்படக் காரணமானார். அவரது இந்த நிலைக்கு நம்மவர்கள் காரணமானார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு யார்பொறுப்பு?

சந்தேகமில்லாமல் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு. இதுவே மிகச்சரியான கூற்று; என்பேன்.

கள்வர்கள் நடமாடும் இடம் என நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெறுமதியான பொருளை எதுவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் அந்த இடத்தில் விட்டுவிட்டு வந்து, அப்பொருள் களவுபோனால் கள்வன் பொறுப்பா? பொறுப்பற்றதனமாக தனமாக அங்குவிட்டு விட்டு வந்தவன் பொறுப்பா? கள்வன் குற்றவாளிதான். கள்வனுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவனை என்னவென்பது?

எனவே, தமது தொடர்ச்சியான கையாலாகத்தனத்தினால் பிரதமர் இனவாதிகளுடன் மெத்தனமாக நடக்க தைரியம் கொடுத்த, சந்தர்ப்பம் கொடுத்த நம் பிரதிநிதிகளே இந்த அழிவுகளுக்கு முதல் குற்றவாளிகள்; பொறுப்புதாரர்கள். இவர்கள் மாத்திரம் சரியாக நடந்திருந்தால் இந்த அழிவுக்கு பிரதமர் இடம் கொடுத்திருக்க முடியாது.

கண்டி இனக்கலவரத்தின் பின்
—————————————
நம்மவர்கள் சரியானவர்களானால், கண்டி இனக்கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பிரதமரின் மெத்தனப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க வேண்டும். இதனைக் கூறும்போது பலரால் எழுப்பப்படுகின்ற கேள்வி, இவ்வாறான ஒரு காலகட்டத்தில் அரசை விட்டு வெளியேறுவது உசிதமானதா? அவ்வாறாயின் மீண்டும் மகிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது?, சில அமைச்சர்கள் கலவர சமையத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள்; அது சாத்தியப்பட்டிருக்குமா?

கலவர சமயத்தில் ஒருவர் சற்று ஆவேசமாக ஒரு அமைச்சரிடம் நீங்கள் ஏன் அரசைவிட்டு வெளியேறக்கூடாது; என்று கேட்க, இன்னொரு அரசு வந்தால் மாத்திரம் இவை நடைபெறாதா? என்ற கேள்வியை எழுப்புகின்ற ஒலிப்பதிவு சமூகவலைத்தளங்களில் வலம் வந்தது. இந்த அமைச்சரின் கூற்று எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு இனவாதிகளுடமிருந்து விடுதலையில்லை; எனவே இந்த அரசிலேயே இருந்துவிட்டுப் போவோமே அடியை வாங்கிக்கொண்டு; என்பதுபோல் இருந்தது. அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன?

மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்குரிய விடைகளை முதலில் பார்ப்போம்.

கேள்வி:இவ்வாறான காலகட்டத்தில் அரசைவிட்டு வெளியேறுவது உசிதமா?
பதில்: நாங்கள் அரசில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசுதான். அரசு கட்டுப்படுத்தாதன் காரணம் அரசிடம் அதற்குரிய மனம் இல்லாமல் இருந்தது. ( The Government did not have the resolve to arrest the situation in time).
நாங்கள் அரசில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்க அரசுக்கு அந்த மனம் இல்லை என்பது தெளிவாகி விட்டது. வெளியேறினால் அரசே கவிழ்ந்துவிடுமென்ற நிலையில் அரசுக்கு அதைக் கட்டுப்படுத்துகின்ற மனம் கண்டிப்பாக வந்திருக்கும். அரசு வேகமாக கட்டுப்படுத்தியிருக்கும்.

கேள்வி: அவ்வாறாயின் மீண்டும் மஹிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது?
பதில்: யாரும் அவ்வாறு கூறவில்லை. எதிர்க்கட்சியில் அமர்வதென்பது கட்டாயம் அரசைக் கவிழ்ப்பதென்பதல்ல. மாறாக, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு “நிபந்தனையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்” என்று ஒரு அறிவிப்பை விடுத்தால் அதன்பின் இன்றைய காலகட்டத்தில் அரச யந்திரம் நமது காலடியில் கிடக்கும்.

இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருந்துகொண்டு எவ்வளவோ சாதிக்கின்றது. காரணம் ஆபத்து வருகின்றபோது அவர்களின் ஆதரவு தேவை என்பது அரசின் நிலையாகும். ஆனால் நாம் சில அமைச்சுப்பதவிகளுக்காக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி செல்லாக்காசாகி சமூகத்தை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றோம்.

கேள்வி: எதிர்க்கட்சியில் இருந்தால் அமைச்சர்கள் இவ்வாறு கலவரபூமியில் களமாட முடியுமா?
பதில்: களமாட வேண்டிய தேவையே வராது. ஏனெனில் அரசு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். தேவை ஒரு கண்டிப்பான உத்தரவு. ஜூலைக்கலவர வரலாற்றைப் படியுங்கள். தேவையானவரை கலவரம் செய்ய அரசு அனுமதித்துவிட்டு, போதும் என்று நினைத்தவுடன் ஒரு சில மணித்தியாலங்கள்கூட அதனைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவைப்படவில்லை.

இந்தப் பதில் ஒருபுறமிருக்க, ஏன் அமைச்சர் பதவி இல்லையென்றால் களமாடவே மாட்டார்களா? களமாடுவதற்காகவே அமைச்சர்களாக இருக்கப்போகின்றார்களா? சரி, களமாடி முடிந்து நிலைமைஓரளவு கட்டுப்பாட்டுற்குள் வந்தபின்பாவது கலவரத்தைக் கட்டுப்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை ராஜினாமா செய்து நிபந்தனையுடனான ஆதரவைத் தெரிவுத்திருக்கலாமே!

கொஞ்சம்கூட வெட்க உணர்வில்லாமல், “ வெட்கமில்லையா அரசில் இன்னும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு, ( வெட்கமில்லாத உங்களுக்கு ஆடைகள் எதற்கு) ஆடைகளை களைந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றெல்லாம் மக்கள் கூறுகின்றார்கள்; என்று நம்மவர்கள் பாராளுமன்றத்தில் பேசிவிட்டு அரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது, “ வெட்கமில்லையா? என மக்கள் கேட்கின்றார்கள். உண்மையில் நாங்கள் வெட்கமில்லாதவர்கள்தான், எனவே அரசைவிட்டுப் போகமாட்டோம், பிரதமரே அஞ்சாதீர்கள்; என்று சொல்லாமல் சொல்கிறார்கள் நம்மவர்கள்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு
————————————————
பதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த நிலையில் நம்பெறுமதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமரும் அரசும் நமது காலடியில் தவமிருந்திருக்கும். நமக்குத்தேவையான எத்தனையோ விடயங்களைச் சாதித்திருக்கலாம். இந்த அதிர்ச்சி வைத்தியம், இந்த அரசு மாத்திரம் அல்ல, எதிர்கால அரசும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தமுடியாது; என்ற செய்தியை வழங்கியிருக்கும்.

நாம் கொண்டுவந்த இந்த அரசை முட்டாள்தனமாக சாதாரணமாக இலகுவில் தூக்கிவீசிவிட முடியாது. இந்த அரசைக்கொண்டு நிறைய சாதிக்க வேண்டும். அதேநேரம் நாம் தூக்கிவீசிய மஹிந்த அரசை மீண்டும் அவ்வளவு இலகுவாக அரசுகட்டிலில் ஏற்றிவிடவும் முடியாது.

மறுபுறத்தில் நாம் செல்லாக்காசாக இந்த அரசில் தொடர்ந்தும் அமரவும் முடியாது. எனவே, நமது ராஜதந்திர நகர்வுகளில் ஒன்றுதான் எதிர்க்கட்சியில் அமர்ந்து நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவது. அதுவும் பலனைத் தராவிட்டால் அடுத்ததாக அரசைக் கவிழ்பது பற்றியும் மாற்றுத்தெரிவு பற்றியும் சிந்திக்கலாம். நமது இலக்கு முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு, உரிமையான அடைவுகள், என்பனவாகும்.

எனவே, தற்காலிகமாக, ஒரு ஆறுமாதத்திற்காவது எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்கமுடியாதா? அந்த குறுகியகாலத்துள் நீங்கள் இழக்கப்போவது உங்கள் அமைச்சுச் சுகம் மாத்திரம்தான். சமூகத்திற்கான அடைவுகளோ ஏராளமாக இருந்திருக்கும்.

துரதிஷடவசமாக, சமூகத்தைவிட அமைச்சுப் பதவி முக்கியம். நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தவுடனே அறிவிப்பு வெளியாகிவிட்டது நம் தலைமைகளிடமிருந்து, பிரதமருக்குத்தான் நாங்கள் ஆதரவு என்று.?மட்டுமல்லாமல் கையொப்பமும் வைத்ததாக செய்தி.

கண்டியில் முஸ்லிம்கள் அடிபட்ட காயம் ஆறுவதற்குள் அடிக்கும்வரை பார்த்திருந்த பிரதமருக்கு ஆதரவு என்று பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. இது ஏற்கனவே, பிரதமருக்குத் தெரியும். அதுதான் ஆட்சியைப்பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்கைத் தேடினார்.

தற்போது என்னசெய்வது
———————————
நமது செல்வங்கள் எதுவும் செய்யமாட்டார்கள்; பிரதமருக்கு ஆதரவாக கைஉயர்துவதைத்தவிர. அதேநேரம் தற்போது அதைத்தவிர வேறுவழியுமில்லை. இதுவரை அமைச்சர்களாக இருந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபின் அதனை ஆதரித்தால் மொத்த முஸ்லிம் சமூகமும் சந்தர்ப்பவாத சமூகமாகப் பார்க்கப்படலாம். மறுபுறத்தில் மாற்று ஏற்பாடு இல்லாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அரசைக் கவிழ்த்துவிட்டு அந்தரத்தில் அலையமுடியாது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வரமுன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இப்பொழுது நாம் மகாராஜாக்கள். வேண்டியதைக் கேட்டுப்பெற்றுக்கொண்டு பிரதமரைப் பாதுகாத்திருக்கலாம்.

இப்பொழுது பிரதமருக்கு ஆதரவளித்தால் அடிமைகள்; ஆதரவளிக்கவிட்டால் துரோகிகள். நம்மவர்கள் ஏற்கனவே அடிமைகளாக இருக்கத் தீர்மானித்து அறிவித்தும் விட்டார்கள். இனி எதுவும் செய்யவும் முடியாது. அடுத்த தேர்தலில் நம்மவர்க்கு மீண்டும் உசாராக வாக்களிக்கத் தயாராவோம். தோற்றுப்போன முஸ்லிம் அரசியலைத் தொடர்வோம்.

Written by lankamuslim

மார்ச் 24, 2018 இல் 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக