சமாதானத்திற்கான நகல் திட்டத்தை வரைவதற்கு தாலிபான்கள் இணக்கம்
ஆப்கான் அரசாங்கத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான அமைதிக்கான நகல் திட்டத்தை வரைவதற்கு தாலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 17 ஆண்டு கால சிவில் யுத்தத்தில் இது ஒரு முக்கிய திருப்பமாகும். வொஷிங்டன் பேச்சுவார்த்தையின் இடையீட்டாளராகச் செயல்படுகின்றது. 1990 களில் இதே வொஷிங்டனே தாலிபான்கள் இயக்கத்தைக் களத்தில் இறக்கியமை நினைவுகூரத் தக்கது.
நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகைக்கு, சமாதானத் தூதுவராகப் பணியாற்றும் ஸல்மை காலிஸாத் கருத்து வெளியிட்டபோது, “போர் நிறுத்தம் மற்றும் வெளிநாட்டுப் படைகள் பின்வாங்குதல் ஆகியன குறித்து தெளிவான உடன்பாடுகள் எதுவும் காணப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் தாலிபான்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
காபூல் ஆட்சியாளர்களை அமெரிக்க பொம்மைகள் என்று வர்ணித்து வந்த தாலிபான்கள், தற்போது அமெரிக்காவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சமாதானத்திற்கான நகல் திட்டம் வரையப்படுகின்றது. இது ஓர் உடன்படிக்கையாக மாற்றமடையும் என ஸல்மைன் காபூலில் ஆப்கான் அதிகாரிகளுக்கு மத்தியில் தெரிவித்தார்.
கொள்கை அளவி லான பல விடயங்கள் குறித்து வொஷிங்டன் மற்றும் தாலிபான்களுக் கிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இரு தரப்பும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை இடம்பெற்ற கால கட்டங்களில் தாலிபான்கள் நடத்திய சில தாக்குதல்கள் பலரது உயிரைப் பலிவாங்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான நிகழ்ச்சி நிரலை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நகல் திட்டம் உள்ளடக்க வில்லையா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போரை நிறுத்துவது சாத்தியமில்லை என்று தாலிபான்களின் பேச்சாளர் சபீஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
இதேவேளை, அல் காயிதா மற்றும் தாஇஷ் போன்ற ஆப்கானில் ஊடுருவியுள்ள ஏனைய ஆயுத இயக்கங்களுக்கு எதிராக செயல்படவும் தாலிபான்கள் உடன்பட்டுள்ளனர். இத்தகைய பயங்கரவாத இயக்கங்களும் நாட்டில் ஊடுருவியுள்ளதால் ஆப்கானின் அமைதி பெரிதும் குலைந்து போயுள்ளது. தாலிபான்கள் தாஇஷ் மற்றும் அல் காயிதாவுடன் எந்தத் தொடர்பினையும் கொள்ளவில்லை. அவற்றை ஆதரிக்கவும் இல்லை என்று ஸபீஹுல்லா மேலும் தெரிவித்தார்.
-ஆப்கானிஸ்தான் 15 ஆண்டுகளாக ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து மீள்வதற்கான ஒரு பெரும் போரில் ஈடுபட்டது. 1990 இல் பொராளிகள் ரஷ்யாவிடமிருந்து நாட்டை மீட்டியதன் பின்னர் தமக்குள்ளே மோதிக் கொண்டனர். இத்தரு ணத்திலேயே 1995 ஆம் ஆண்டளவில் தாலி பான்கள் களத்திற்கு வந்தனர். 2003 இல் அவர் களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தானில் தாலிபான்கள் தனித்தனி இயக்கமாகச் செயல்படுகின்றனர்.-MP
பின்னூட்டமொன்றை இடுக