தவறான முன்னுதாரணங்களை கொண்டு எதிர்காலம் அமைந்துவிடக் கூடாது: JVP
மஹிந்தவை எதிர்த்ததற்காக ரணிலை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. ரணிலை பிரதமராக ஆதரிக்கப்போவதும் இல்லை, தேர்தலில் அவர்களையும் வீழ்த்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
இதேவேளை, எம்மை ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் என கூறும் தரப்பினர் தான் தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தனர். ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது ஓடி ஒளிந்தவர்கள் எம்மீது விரல் நீட்டத் தகுதியில்லையென அவர் குறிபிட்டார்.
நிகழ்கால அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஜே.வி.பி. மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து எம்மை பச்சை நிறமாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. எம்மை ஐக்கிய தேசியக் கட்சியெனக் கூறும் நபர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தனர் என கேட்க விரும்புகின்றேன். மஹிந்தவுடன் இன்று கைகோர்த்து செயற்படும் நபர்கள் சிறிது காலத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்தனர். அப்போது பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தபோது ரணிலை பாதுகாத்த நபர்கள்தான் இன்று எம்மை ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் என்று கூறுகின்றனர். மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சரவை பேச்சாளராக உள்ள இருவரும் அன்று ரணிலுடன் அவரது ஆட்சியில் கூட்டணி அமைத்தவர்கள். இன்று அவர்கள் தமது தவறுகளை மறைத்துக்கொள்ள எம்மீது பழிசுமத்துகின்றனர்.
நாம் எப்போதும் பாராளுமன்ற விதிமுறைக்கமைய செயற்பட்டு வருகின்றோம். பாராளுமன்ற விதிமுறைக்கு முரணாக சர்வாதிகார போக்கில் ஜனாதிபதி செயற்பட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்து சட்டவிரோத அமைச்சரவையை நியமித்தமைக்கும் பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாது தேர்தல் ஒன்றினை நடத்த முற்பட்டமைக்கு எதிராகவே நாம் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான நம்பிக்கையிலா பிரேரணை ஒன்றினை கொண்டுவந்தோம். அதில் வெற்றி பெற்றுவிட்டதால் நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றோம் என அர்த்தம் இல்லை. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தாலும் நாம் ஆதரவாகவே வாக்களிப்போம். எமக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்ற நோக்கம் இல்லை. வெகு விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட தேர்தலாக அமைய வேண்டும். அதனையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
தாம் நினைத்த நேரத்தில் அரசியலமைப்பினை மீறி தமது அரசியல் நலனுக்காக ஆட்சியை மாற்றியமைக்க இடமளிக்க முடியாது. தவறான முன்னுதாரணங்களை கொண்டு எதிர்காலம் அமைந்துவிடக் கூடாது. மக்களின் பிரதிநிதிகளாக இன்று பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் எவ்வாறு மோதிக்கொள்கின்றனர் என்பது நாட்டு மக்களுக்கு நனறாகவே தெரிகின்றது. இவ்வாறான ஆட்சி மோகம் கொண்ட வெறியர்களை போல மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் பாராளுமன்றத்தில் நடந்து கொண்டதில்லை. எம்மைக் குறைகூறும் நபர்கள் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் பணத்துக்கும் மஹிந்த ராஜபக் ஷவின் பணத்துக்கும் விலை போயுள்ளனர் என்பது இன்று ஊடகங்களின் மூலமாக வெளியில் வருகின்றன. ஜனாதிபதியே தமக்கு பெரும்பான்மையை தக்கவைக்க பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றார். இந்த நிலையில் எவரும் எம்மை குறைகூறத் தகுதியில்லாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.VV
பின்னூட்டமொன்றை இடுக