Lankamuslim.org

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் மனைவி, மகள், இளையமகன் உடல்கள்?

leave a comment »

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்களும் நந்திக் கடல் பகுதியில் கரையோரம் கிடப்பதாக சில தொலைக்காட்சி செய்திகள் புதன்கிழமை தெரிவித்தன. பிரபாகரன் உடல் இருந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு சுமார் 600 அடி தொலைவிலேயே இந்த மூவரின் உடல்களும் கிடந்ததாகக் கூறப்படுகிறது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனியின் உடல் கிடைத்தது தான் 2 நாள்களுக்கு முன் முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு பிரபாகரனின் உடல் கிடந்ததாகக் கூறப்பட்டது. இப்போது இதர குடும்ப உறுப்பினர்களும் இறந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. பிரபாகரன் மனைவி, மகள், மகன்கள் இறப்பு தொடர்பாக இலங்கை அரசும், ராணுவமும் தெரிவிக்கும் தகவல்களும், அவை தெரியவரும் விதமும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. பிரபாகரன் இறப்பு பற்றிய செய்திகளையே நம்ப வேண்டாம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்த நிலையில் அடுத்தடுத்து சடலங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுவதால் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. “”மதிவதனி, மகள், இளைய மகன் ஆகிய மூவருமே தப்பிவிட்டார்கள், ஐரோப்பிய நாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்றெல்லாம் முன்னர் கூறப்பட்டது. பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் உடல்களைப் பார்த்து அது அவர்கள்தான் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்ததாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் பார்க்கப்பட்ட பிறகு அந்த இடம் முழுவதுமே சல்லடை போட்டு ராணுவத்தால் தேடப்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அருகில் 600 அடி தொலைவில் இந்த மூவரின் உடல்களை எப்படி அவர்கள் அன்றே பார்க்காமல் போனார்கள் என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ராணுவம் காவல் போடாமல் இருந்திருக்காது. அப்படி இருக்கும்போது இந்த மூவரின் உடல்கள் எப்படி அங்கு வந்தன என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ராணுவத்தின் கைகளில் சிக்கக்கூடாது என்று தங்களுடைய இயக்க வீரர்களைக் கொண்டே தங்களுடைய வாழ்க்கையை இவர்கள் அனைவரும் முடித்துக் கொண்டனரா, அல்லது ஏதேனும் வஞ்சகம் செய்து இவர்களைப் பிடித்து ராணுவமே சுட்டுக் கொன்றதா என்று மர்மமாக இருக்கிறது. சமாதி எங்கே?: வீர மரணம் அடைந்த பிரபாகரனுக்கு பொதுக் கல்லறையில்தான் உடல் அடக்கம் நடைபெறும் என்று இலங்கை ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. ஆனால் மற்றொரு வட்டாரமோ அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில்தான் அடக்கம் நடைபெறும் என்று அறிவித்தது. அரசு எதையும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

Written by lankamuslim

மே 21, 2009 இல் 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக