எகிப்து ஜனாதிபதியின் மகன் நாட்டைவிட்டு ஓட்டம் ?
கெய்ரோ: எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் கமால் முபாரக் குடும்பத்துடன் பிரிட்டனுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கமால் முபாரக்,அவரது மனைவி மற்றும் மகளைக் கொண்ட விமானம் மேற்கு கெய்ரோ விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குக் கிளம்பியுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அரேபிய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது விரிவாக
ஹொஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி நாட்டில் பல நகரங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே கமால் நாட்டைவிட்டு வெளியேறிய செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி முபாரக் மற்றும் அவரது மகன் ஆகியோரது படங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கமால் உங்களை நாம் வெறுக்கிறோம். என உங்கள் தந்தையிடம் கூறுங்கள் என கோஷமிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 வருட கால முபாரக்கின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மக்கள் எதனையும் இழக்கதூஞூ தயாராகியுள்ளதாகக் கூறியுள்ள ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் குழுக்கள் இவ்வார்ப்பாட்டங்கள் சித்திரவதை, வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவற்றை மையப்படுத்தி இருக்குமெனவும் இது முடிவின் ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளனர்.
டியூனீசியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களினால் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டதுடன் ஜனாதிபதியும் நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில் எகிப்திலும் அதே பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
டியூனீசியாவின் நிலைவரம் அரபுலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களை விழிப்படையச் செய்துள்ளதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் நடவடிக்கைகளினால் ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முபாரக்கிற்கு அடுத்ததாக கமால் முபாரக்கே பதவிக்கு வருவாரென்பது பெரும்பாலான எகிப்தியர்களின் ஊகமாக இருக்கின்ற போதும் முபாரக்கும் கமாலும் இதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – ரைம்ஸ் ஒவ் இந்தியா
பின்னூட்டமொன்றை இடுக