அன்று புலிகள் இன்று அவர்களை ஊக்குவித்தவர்கள்
இர்ஷாத்றஹ்மத்துல்லா, முஹம்மத் சஹீன், எம்.பிஸ்ரின்: புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசம் இன்று மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான இடமாக மாறியுள்ளது.அன்று கணவன் வேறு ஒரு இடத்திலும் மணைவி வேறு ஒரு இடத்திலும்,பிள்ளைகள் பதுங்குழிக்குள்ளும் பாதுகாப்பு தேடி உறங்கிய காலம் இன்று இல்லை,அதனை மீண்டும் ஏற்படுத்துவதற்கு எவரும் இடமளிக்க கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலை செல்வ நகர் கிராமத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
அன்று புலிகள் செய்ததை இன்று அவர்கள் இல்லாத போதும் அவர்களை அன்று எவர்கள் ஊக்குவித்தார்களோ அவர்கள் செய்கின்றனர். மக்களிடம் வந்து உரிமைக்காக வாக்களியுங்கள் என்று கேட்கின்றனர். இவர்கள் பெற்றுத் தந்த உரிமை தான் என்ன?இன்னும் இவர்களை நம்பி எமது தமிழ் பேசும் மக்கள் பின்னால் செல்வார்கள் என்றால்,அது இந்த மாவட்ட மக்களின் வீழ்ச்சிக்கும்,பின்னடைவுகளுக்குமே காரணமாகும்.
நாம் மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், மொழியால் தொப்புள் கொடி உறவினை கொண்டவர்கள். இஸ்லாமியர்கள் அரபு மொழியினை கொண்டவர்கள் என்று கூறினாலும், நாம் தமிழைத் தான் தாய் மொழியாக கொண்டுள்ளோம்.அதனால் தான் தமிழ் பேசும் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகின்ற போது,அதனை துணிந்து தட்டிக்கேட்கின்றோம்.எமது மக்களுக்கான சேவையினை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எம்மீது இனரீதியான,மத ரீதீயான தாக்குதல்களை தொடுக்கின்றனர். மக்களுக்கான பணியினை அவர்களும் செய்வதில்லை எம்மையும் பணி செய்ய விடுவதுமில்லை.
இந்த நாட்டில் இன்னும் பயங்கரவாதம் நிலை கொண்டிருக்குமெனில்,எத்தனை உயிர் அழிவுகளையும், இழப்புக்களையும் சந்திக்க நேரிட்டு இருக்கும். இன்னும் செல்வ நகர் கிராமம் மின்சாரத்தை கண்டிருக்காது.பாதைகள் கூட இங்கு வந்திருக்காது. இந்த அபிவிருத்திகள் மேலும் எமது கிராமங்களுக்கு வருவதற்கு உங்களுக்கு பணியாற்றக் கூடிய நல்ல அரசியல் தலைவைர்கள் உருவாக வேண்டும்.அதனை நீங்கள் உருவாக்கி காட்ட வேண்டும்.
வெற்றிலை சின்னத்தில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்வதன் மூலம்,இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர எனைய அனைத்தையும். மாகாண சபை மூலமும்,எம்மைக் கொண்டு மத்திய அரசின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
பின்னூட்டமொன்றை இடுக