அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகள் இப்போதாவது மிகச்சரியான முடிவை எடுக்க வேண்டும்: அநுரகுமார
நாட்டில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சகல தரப்பினரும் செயற்படுகின்றனர். அரசாங்கத்திற்குள் இருப்பவர்களே சரியான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருக்கின்ற நேரத்தில் பலமான எதிரணியினை உருவாக்க வேண்டும்.
பொது எதிரணியொன்றிற்கான அடித்தளமிடப்படுமாயின் எமது ஆதரவினை வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளும் இப்போது சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மீண்டுமொரு வரலாற்று தவறினை முஸ்லிம் தலைவர்கள் செய்து விட வேண்டாம் என வும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியினை உருவாக்க வேண்டுமெனவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அரசியல் கட்சி தலைவர்களும் ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினரிடம் வினவிய போதே கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; நாட்டில் கட்டாயமானதொரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மூவின மக்களும் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினை இழந்து விட்டனர்.
எனவே, இந்த சந்தர்ப்பம் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டிய சந்தர்ப்பமாகவே நாம் கருதுகின்றோம். அதேபோல் பொது வேட்பாளர் தொடர்பிலும் ஒரு சிலர் குறிப்பிடுகின்ற போதிலும் அது சாத்தியமற்றதாகவே உள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சி தனித்து போட்டியிட தீர்மானமெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் தனித்து செயற்படுவது ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தப்போவதில்லை.
எனவே, அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாமும் எமது தனிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனினும் பொது எதிரணியொன்றினை ஏற்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதாயின் மக்கள் விடுதலை முன்னணி பூரண ஆதரவினை வழங்கத்தயாராகவே உள்ளது.
அதேபோல் அரசாங்கத்தின் கூட்டுக்கட்சிகள் சிலவும் தற்போது அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையினை இழந்து விட்டன. குறிப்பாக அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம்கட்சிகள் இப்போதாவது மிகச்சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை முற்றிலும் வெறுக்கின்றனர். அதேபோல் முஸ்லிம்களின் எதிர்ப்பினை சம்பாதித்துள்ள அரசாங்கத்திற்குள் முஸ்லிம் கட்சிகள் இருப்பதால் ஒருபோதும் முஸ்லிம்களின் ஆதரவினை பெற முடியாது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் தலைவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைத்துவம் முஸ்லிம் மக்களை ஏமாற்றி விட்டது. அவ்வாறானதொரு வரலாற்று தவறினை மீண்டும் ஒருமுறை இவர்கள் செய்து விடக்கூடாது. எனவே நாட்டை சரியான பாதையில் இட்டு செல்வதற்கான சரியான முடிவுகளை அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.-வீரகேசரி
பின்னூட்டமொன்றை இடுக