தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்படும்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து இணக்கம் காணப்பட்டால் அதன் பின்னர் அரசியல் சாசனத் திருத்தங்களை முன்மொழிந்து அவற்றை பாராளுமன்றில் அனுமதிக்காக சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த யோசனை நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பெரும்பான்மை பலமின்றி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்க பிரதான கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் மக்களும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னூட்டமொன்றை இடுக