ஐ.நா.வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் அமைச்சர் மங்கள
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ள தாக அரசாங்கம் நியூயோர்க்கில் தெரிவித்து உறுதியளித்துள்ளது.
முன்வைக்கப்பட்டிருக்கின்ற யோசனையானது எமது நாட்டைப் பொறுத்தவரையில் வெற்றிகரமானது என்று கூறவேண்டும். அத்துடன் கடந்த பல வருடங்களாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையிலிருந்து இலங்கையானது தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அத்தகைய நிலைமை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது என்றும் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கடந்த பல வருடங்களாக இலங்கையின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகம் நாட்டை வெட்கத்திற்கு உள்ளாகும் யோசனைகளை முன்வைத்தது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிரான யோசனைகள் வெற்றி பெற்றதுடன் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவைக்குள் கொண்டுவரப்பட்ட யோசனையில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்ற போதிலும் பேரவையில் முன்வைக்கப்பட்ட இணக்கப்பாடுகளை வெற்றியடைய செய்ய தவறியதால், இலங்கை மக்கள் பெற்ற வெற்றி தோல்வியடைந்தது.
இதன் மூலம் 2012, 2013, 2014, ஆம் ஆண்டுகளில் யோசனைகள் கொண்டு வருவதற்கான வழிவகை ஏற்பட்டதுடன் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் எதிராக மாறின. இதனால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவமானமும் அவமதிப்பும் ஏற்பட்டது.
இதனால், பல தசாப்த காலமாக சகல நாடுகளுடன் இணக்கத்துடன் நடுநிலையாகவும் நட்புறவுடனும் இருந்து, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கௌரவத்துக்கு பாத்திரமாக இருந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த காலப் பகுதி அகௌரவமான காலமாக மாறியது.
2009 ஆம் ஆண்டு மூன்று தசாப்த கால போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலாபலன்கள் கிடைக்காமல் போனது. சுதந்திரமும், ஜனநாயக ரீதியான ஆட்சியும் இல்லாம் போனது. சமாதானமாகவும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்ற எமது நாட்டு மக்களின் அபிலாஷை அவர்களுக்கு இல்லாமல் போனது.
நல்லிணக்கம் மூலம் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப கிடைக்க சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டதால், நாடு சர்வதேசத்திற்கு மத்தியில் மேலும் தனிமைப்படுத்தப்பட்டது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக மௌனம் சாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு சர்வதேச அர்த்தப்படுத்தல்களையும் விசாரணைகளையும் எதிர்நோக்கியது.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் திடசங்கர்ப்பமான முயற்சியின் பலனாக இலங்கைக்கு மீண்டும் சர்வதேசத்தின் பெறுமதியான மதிப்பு கிடைத்துள்ளது.
உலகத்தின் பெறுமதியை மதிக்கும், பொறுப்பு , நம்பிக்கை மற்றும் சமாதானமான நாடாக இலங்கை மீண்டும் சர்வதேசத்துடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.-vk
பின்னூட்டமொன்றை இடுக