நாட்டுக்குள் முஸ்லிம் ஆக்கிரமிப்பும் விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இணைப்புக்கள் : பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பௌத்த சங்க சம்மேளன ஒன்றுகூடல் நிகழ்வு மியன்மாரைச்சேர்ந்த விராது தேரரின் பங்கேற்புடன் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்
ஆரம்பமானது.
பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தலைமையில் ‘நாட்டை பாதுகாக்கும் வழி’ எனும் தொனிப்பொருளில் ஒன்று கூடல் நடைபெற்றது. சிங்கள, பௌத்த மரபுகளை பறைசாற்றும் வகையில் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் உள்ளக அரங்கைச் சுற்றிபௌத்த கொடி என்பன தொங்கவிடப்பட்டிருந்தன. சிங்கள பௌத்த பாடல்கள் ஒலிக்கப்பட்டதுடன் பொதுபலசேனா அமைப்பின் வெளியீடுகளும் இதன்போது விற்பனை செய்யப்பட்டன.
மியன்மாரை சேர்ந்த விராது தேரருக்கு அரச விசேட பிரமுகர் வி.ஜ.பி பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எம்.எஸ்.டி மற்றும் பி.எஸ். டீ பாதுகாப்பும் வழங்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது இந்நிகழ்வில் இந்தியா, நேபாளம், ஜம்முகஷ்மீர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அகில இலங்கை இந்து சம்மேளனப் பிரதிநிதிகள், 5,000 க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் ஆதிவாசிகளின் தலைவர் வன்னியலத்தோ மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மியன்மாரைச் சேர்ந்த விராது தேரருக்கு அரசினால் பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததுடன் . அவரை எவரும் நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. படப்பிடிப்பாளர்கள் கூட அவரை தொலைவிலிருந்தே புகைப்படமெடுக்க வேண்டியிருந்தது.
கலகொட அத்தே ஞானசார தேரர்
சிங்கள பௌத்தர்களால் முஸ்லிம் வஹாபி அடிப்படை வாதத்தை தடுக்க முடியாமல் இருப்பது வெட்கப்படவேண்டிய விடயம் , நாட்டுக்குள் முஸ்லிம் ஆக்கிரமிப்பும் விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அங்கு உரையாற்றிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த நாடான இலங்கைக்கு விராது தேரர் வருவதை தடுப்பதற்கு முஸ்லிம் கவுன்ஸிலுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர்கள் யார்? இந்த மாநாடு முடிந்த பின்னர் அவர்களை நாம் கவனித்துக் கொள்வோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
தமிழர்கள் சிறுபான்மை இனமாக இருந்தாலும் பிரபாகரன் தனிநாடு கோரினார். அத் தைரியத்தை பாராட்டுகின்றேன். ஆனால் பெரும்பான்மை இன சிங்கள பௌத்தர்களால் முஸ்லிம் வஹாபி அடிப்படைவாதத்தை தடுக்க முடியாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்றும் தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற பொதுபல சேனாவின் சங்க சம்மேளத்தில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மியன்மாரின் விராது தேரர் இங்கு வருவதை தடுப்பதற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் கடிதம் எழுதுகிறது.
ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என அச்சுறுத்துகின்றது. பௌத்த நாடான இலங்கைக்கு பௌத்த குருவானவர் வருவதை தடுப்பதற்கு முஸ்லிம் கவுன்ஸில் யார்? அதற்கு என்ன அதிகாரம் உண்டு? இங்கு தேரர் வருவதற்கு முஸ்லிம்களின் அனுமதி தேவையில்லை. முஸ்லிம் கவுன்சிலை மாநாடு முடிந்த பின்னர் பார்த்துக் கொள்வோம். உலமா சபை ஒரு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாகும். அது இங்கு இயங்கி வருகின்றமையானது பெரும் பயங்கரமான நிலைமைகளை உருவாக்கும்.
சூறா சபை, உலமா சபை இவையெல்லாம் முஸ்லிம் நாடுகளிலுள்ள அமைப்புகளாகும். அவற்றுக்கு இங்கு என்ன வேலை. அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பிருந்தால் இவற்றை தடை செய்ய வேண்டும். நாட்டுக்குள் முஸ்லிம் ஆக்கிரமிப்பும் விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . வஹாபிவாதம் பரப்பப்படுகின்றது. பள்ளிவாசல்களில் இரகசியமாக என்ன இடம்பெறுகிறது. தப்லீக் ஜமாத்இ சூறா கவுன்சில், ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு முடிவுகட்ட வேண்டும். இல்லாவிட்டால் 27000 படையினர் உயிர் தியாகம் செய்து பாதுகாத்த நாடு வஹாபி வாதத்திற்கு அடிமைப்பட்டுவிடும். எனவே அரசியல் அபிலாஷைகளை மறந்து நாட்டையும் சிங்கள பௌத்தர்களையும் ஜனாதிபதி,ரணில், அநுர திஸாநாயக்க ஆகியோர் திரும்பிப் பார்க்க வேண்டும். காவியுடைக்கு இந்நாட்டில் ஆட்சியை உருவாக்கவும் முடியும் அதேபோன்று கவிழ்க்கவும் முடியுமென்பதை தலைவர்கள் உணர வேண்டும்.
சோபித தேரர் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப் போகிறாராம். தேரர் திரும்பிக் பார்க்க வேண்டும் அவருக்கு செலவு செய்வது இலங்கைக்கு எதிரான அரச சார்பற்ற நிறுவனங்களும் அமெரிக்கத் தூதரகமுமே ஆகும். சிங்கள பௌத்த ஆட்சியை உருவாக்குவதே எமது திட்டமாகும். அதற்கு உகந்தவருக்கே ஆதரவு வழங்குவோம்.
பிரபாகரனால் தனிநாடு கோரும் தைரியம் இருந்தது. ஆனால் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களுக்கு முஸ்லிம் வஹாபிவாதம் பரவுவதை தடுக்க முடியாமலிருப்பது வெட்கமாகவுள்ளது.முஸ்லிம் சட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம். தர்மாசனத்தை சரிபார்த்து வடிவமைக்கும் எமக்கு அரச ஆசனத்தை சரிபார்க்க முடியும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.-VK
இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த்
கிழக்கு மாகாணத்திலுள்ள காரைத்தீவு விபுலானந்த சதுக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த் தெரிவித்துள்ளார் .
கடந்த காலங்களில் தமிழ் சமூகம் குறிப்பாக இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர் மொகலாய சக்கரவர்த்திகளாலும் மேற்கத்தேயவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் மதமாற்றமும் செய்யப்பட்டனர். காலம் கடந்துள்ளபோதும் எமக்கெதிரான இந்த சவால்கள் மாறவில்லை.
ஒரே ஒரு கேள்வியைதான் கேட்க விரும்புகிறேன். பௌத்தமும் இந்து மதமும் ஒரே மண்ணிலிருந்து தோன்றின. பாரதத்தில் இருந்துதான் தோன்றின. இப்படியாக ஒரே தேசத்தில் இருந்து தோன்றியவர்கள் இன்று ஒருவரை ஒருவர் வெறுக்கின்றோம். ஆனால் அந்நிய தேசத்திலிருந்து அறிமுகப்படுத்திய கலாசாரத்தை ஞாபகத்தில் வைத்துள்ளோம். எனவே எமது நாட்டிலுள்ள இந்துக்கள் எம்மை ஆதரித்து ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்.
கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு விபுலானந்த சதுக்கத்திலே முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒல்லாந்தர் காலத்திலே தரைமட்டமாக்கப்பட்ட அம்மன் ஆலயம் இன்று மடு மாதா தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, மடு மாதா ஆலயத்தை மீட்டு மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைப்பாரா என்பதை கேட்க விரும்புகின்றேன். ஓவ்வொரு மாவட்டத்தையும் தனித்தனி மறைமாவட்டங்களாக மாற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, மதமாற்றம் செய்வதை கைவிடுவாரா என்றும் கேட்கிறேன்.
இந்துக்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து எமது தொண்டர்கள் பிரசாரம் செய்வார்கள் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன். – இந்து- பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து – பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும் என நான் முன்மொழிகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார் .-TC
படங்கள் அஸ்ரப் ஏ ஸமத்
பின்னூட்டமொன்றை இடுக